17.நம்பிக்கையின் பிரிவுகள்
அர்ச்சுனன்: வேண்டுகோள்:
கிருஷ்ண பரமாத்மாவே சாஸ்திர நியமங்களையும் விதிமுறைகளையும் அறியாத மனிதர்கள் பக்தி சிரத்தையுடன் உங்களைப் பூசிக்கிறார்கள்.வேள்வி முதலான புனித அநுட்டானங்களை மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய பக்தி சிரத்தை சாத்வீகமானதா? ராஜஸமானதா? அல்லது தாமசமானதா?( அமைதியானதா? ஆடம்பரமானதா? கொடுமையனதா?)
பகவான்: அர்ச்சுனா!! மனிதர்களின் இயல்பு வழியாக ஏற்படும் சிரத்தை ஈடுபாடு மூன்று வகைப்படும்.அவை சாத்வீகம் ராச்சதம், தாமசம்.
அர்ச்சுனன்: மனித இயல்பின் மூலம் ஏற்படும் அந்த ஈடுபாடு ஏன் 3 வகைப்பட வேண்டும்?
பகவான்: பரத வம்சத்து புதல்வனே! எல்லா மனிதர்களிடமும் இடம்பெற்றுள்ள சிரத்தை அவர்களுடைய அந்தக் கரணம் எனும் உள்மன உணர்வுக்கு ஏற்றவாறு அமைகிறது. ஈடுபாடு கொண்டு முனைபவன் சிரத்தை மயமானவன்.ஆகையால் எந்த மனிதனுக்கு எத்தகைய சிரத்தையுள்ளதோ அதன் சொரூபமாக அவன் இயல்பும் அமையும்.அவனது செயலும் நிலையும் அந்த இயல்புப்படியே அமையும்.
அர்ச்சுனன்: அப்படியானால் பகவானே அந்த சிரத்தையை எப்படி இனம் கண்டு கொள்வது?
பகவான்: சாத்வீகமான இயல்பு கொன்ட மனிதன் தேவதைகளை பூசித்து ஆராதிக்கின்றான்.இராட்சத இயல்பு கொண்டவன் யட்சர்களையும்,இராட்சதர்களையும் பூசிக்கிறார்கள்.தாமச குணம் கொண்டவர்கள் பூதங்கள் பிரேதங்களை பூசிக்கிறார்கள்.
அர்ச்சுனன்: சிரத்தை ஈடுபாடு இல்லாத மனிதர்களுக்கு என்ன அடையாளம்?
பகவான்: அர்ச்சுனா! சிரத்தையில்லாத மனிதர்கள் வீண் பெருமை கர்வம், பேராசை தீவிர ஈடுபாடு பிடிவாதம் உள்ளவர்களாக இருப்பார்கள்.சாத்திர விதிகளுக்கு புறம்பாக கொடும் தவத்தை மேற்கொள்கிறார்கள்.ஐம்பூதப் பொருட்களால் ஆன சரீரத்தையும் அந்தக் கரணத்தில் உள்ள என்னையும் துன்புறுத்துகிறர்கள்.இத்தகைய அஞ்ஞானிகளை நீ அசுர சுபாவம் உள்ளவர்கள் என்பதை உணர்ந்து கொள்.
அர்ச்சுனன்: பகவானே! இதுவரையில் நீங்கள் பூசை, ஆராதனை, தவம் மூலமாக சிரத்தை கொண்டவர்கள், சிரத்தை இல்லாதவர்கள் என்னும் மனிதர்களை இனம் காண்பதைப் பற்றி உபதேசித்தீர்கள்.ஆனால் எவர் பூசை தவம் செய்யாதிருக்கிறார்களோஅவர்களை எப்படி அறிந்து கொள்வது?
பகவான்:அர்ச்சுனா! உணவின் சுவையைக் கொண்டு அதனை விரும்புபவர்களை அடையாளம் காணலாம்.( உணவு பழக்கம் மூலம் உண்பவர்களின் தராதரம் தெரியவரும்). காரணம் எல்லா மனிதர்களுக்கும் மூன்றுவகை உணவுகள் பிரியமானவை.இதைப் போல் வேள்வி,தவம், தானம் மூன்றும் மூன்று வகைப்பட்டவர்களுக்கும் பிரியமானவை. இந்த வித்தியாசத்தை இப்போது சொல்கிறேன் கேள்.
அர்ச்சுனன்: சாத்வீகமான மனிதனின் சுவை ஈடுபாடு எத்தகைய உணவில் ஏற்படுகின்றது?
பகவான்:அர்ச்சுனா! ஆயுள்,சாத்வீக குணங்கள்,உடல் வலிமை,ஆரோக்கியம்,சுகம்,மகிழ்ச்சி இவைகளை வளர்ப்பவையும் ,நிலையாக இருப்பவையும் இதயத்திற்கு வலிமை அளிப்பவையும் சுவையானவையும், ஈரப்பசை கொண்டவையுமான உணவுப்பண்டங்கள் சாத்வீகமான மனிதனிற்கு பிரியமானவைகள்.
அர்ச்சுனன்: இராட்சத மனிதனிற்கு பிடித்தமான உணவுகள் எவை?
பகவான்:மிகக் கசப்பும், புளிப்பும், உப்பும் உள்ளவை.மிகச் சூடானவை,காரமானவை,எரிச்சல் ஏற்படுத்துபவை.இத்தகைய பதார்த்தங்கள் இராட்சத குணம்படைத்தவர்களுக்கு பிடித்தவை.இவை துன்பத்தையும் சோகத்தையும், வருத்தத்தையும் நோயையும் ஏற்படுத்துகின்றன.
அர்ச்சுனன்: தாமச இயல்பு கொண்டவர்களுக்கு விருப்பமானவை எவை?
பகவான்: அர்ச்சுனா! அரைகுறையாக வெந்து சுவையில்லாதது,கொடுநாற்றம் கொண்டது.( மதுவகை,வெங்காயம்,உள்ளிப்பூண்டு போன்றவை)பழையது, ஊதிப்போனது, தீண்டத்தகாதது( இறைச்சி, மீன்,முட்டை முதலியவை).இப்பொருட்களில் தாமச குணமுள்ள மனிதர்களுக்கு ருசி சுவை மிக விருப்பம் அதிகம்.
அர்ச்சுனன்: பகவானே! ஆகாரவகைகள் மூன்றுவகைப்படுவதை அறிந்தேன்.இதேபோல் வேள்வி,தவம், தானம் இவையும் மூன்று வகைப்படும் என்றீர்கள்.இவைகளுக்குள்ள வேள்வியின் பிரிவுகளைப் பற்றி கூற வேண்டும்?
(முதலில் யசனம், பூசனம், போசனம், வேள்வி வழிபாடு உணவு மூன்றின் மூலமாக ஈடுபாடு சிரத்தையை அறியச்செய்தார்.அதன்மூலம் சாஸ்திர விதிகளை அறியாமை காரணமாகப் புறக்கணிக்கப் படுபவர்களை இனம் காணமுடியும்.ஆனால் சாஸ்திர விதிமுறைப்படி வேள்வி வழிபாடு உண்ணுதல் புரிபவர்களின் வித்தியாசங்ளை அறியச் செய்வதே இங்கு வேள்வி,தவம்,தான்ம் மூன்றுக்குரிய மூவகைப் பேதங்களையும் போதிக்கலானார்)
பகவான்: அர்ச்சுனா! வேள்வி செய்வது,நம் கடமையெனும் உணர்வோடு, மனப் பக்குவத்தோடு பயனை பற்றிச் சிந்திக்காமல் , சாஸ்திர விதிமுறைப்படி செய்யப்படும் வேள்வி சாத்வீகமானது.
அர்ச்சுனன்: இராட்சத வேள்வி எத்தகையது?
பகவான்: பரதகுல செல்வனே! பயனை எதிபார்த்து சுயநலத்திற்காக செய்யப்படுவதும் பிறர் பராட்ட வேண்டும் என்னும் நோக்கத்தில் பகட்டாக செய்யப்படுவதும் இராட்சத வேள்வி எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! தாமச வேள்வி எத்தகையது?
பகவான்: சாஸ்திர விதிகளிற்கு புறம்பானதும் அன்னதானம் இல்லாததும் மந்திர உச்சரிப்பு அற்றதும் தட்சணை அளிப்பு இல்லாததும் சிரத்தையற்றதுமான வெறும் பகட்டு வேள்வி தாமச வேள்வி எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! தவம் எத்தனை வகைப்பட்டது என்பதை உபதேசிக்க வேன்டுகிறேன்?
பகவான்: அர்ச்சுனா!தவஸ்( தவம்) மூன்று வகைப்பட்டது.உடலால் வாக்கால், மனத்தால் புரிவது.தேவதைகள், பிராமணர்கள், குருமார்கள்,ஜீவன் முத்தர்களான் மகாபுருஷர்கள் இவர்களை போற்றி பூசிப்பது.நீர், மண் முதலியவற்றால் உடலைப் பரிசுத்தமாக்கி கொள்வது.உடல்சார்ந்த பணிகளை எளிதாகவும், நேரியதாகவும் வைத்திருத்தல்( பதட்டம் பிடிவாதம் கொள்ளாது இருத்தல்) பிரம்ம சரியத்தை கடைப்பிடித்தல். உடலால் பிறருக்கு தீங்கு செய்யாதிருத்தல் .இதுதான் உடல் சார்ந்த தவம்.
அர்ச்சுனன்: வாக்கினால் புரியும் தவம் எத்தகையது கண்ணா?
பகவான்: எரிச்சல் ஊட்டுவதும் ஆத்திரம் ஊட்டுவதுமாக இல்லாத, உண்மையாக,பிரியமான நலம் தரும் வார்த்தைகளைப் பேசுவது.கல்வி வேள்விகளில் ஈடுபட்டிருப்பது.ஜெபம், அர்ச்சனை முதலியவற்றை பயில்வது.இவைதான் வாக்கினால் புரியும் தவம்.
அர்ச்சுனன்: மனத்தால் புரியும் தவம் எது கண்ணா?
பகவான்: அர்ச்சுனா! மனத்தை மகிழ்சியாக வைத்து கொள்வது.எப்போழுதும் இனிதாகப் பழகுவது.சிந்திக்கும் திறன்,மனவடக்கம்,தூயகருத்து இவற்றை முறையாக பயன்படுத்துவது தான் மானசீக தவம்.
இம்மூன்று வகை தவங்களையும் மிக்க ஈடுபாட்டுடன் பயனீட்டும் ஆசையில்லாமல் நன்றாக செய்து வந்தால் அதுதான் சாத்வீகமான தவம் எனப்படும்.
அர்ச்சுனன்: இராட்சத தவம் எது கண்ணா?
பகவான்: அர்ச்சுனா! எந்தத் தவம் சொந்த நலனுக்காகவும் , கெளரவுத்துக்காகவும் , போற்றுதலுக்காகவும் செய்யப்படுகிறதோ மேலும் பிறரை வியக்க வைக்க வேண்டிய பாசாங்காக செய்யப்படுகிறதோ,அதுதான் ரஜோகுணம் மேலோங்கிய பகட்டுத்தவம் .இதனால் நல்ல பலன் ஏற்படாது.கிடைக்கும் சிறிதளவு பலனும் அழிந்தே போகும்.
அர்ச்சுனன்: பகவானே! தாமசகுணம் மேலோங்கும் தவம் எது?
பகவான்: எந்த தவம் அறியாமையும் பிடிவாதமும் கொண்டு தம்மை வருத்திக்கொண்டு பிறரையும் துன்புறுத்திக் கொண்டு செய்யப்படுகிறதோ அது தாமச தவம் எனப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! இப்போது தானம் மூன்றுவகைப்படுவது எப்படி என்பது உபதேசிக்க வேண்டுகிறேன்?
பகவான்: அர்ச்சுனா! தானம் கொடுப்பது நம் கடமை எனும் கருத்துடன் பிரதிபலன் எதையும் எதிர்பராமல் செய்ய வேண்டும்.மேலும் இடம் , காலம், தகுதி அறிந்து நல்லவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.இத்தகைய தானம் சாத்வீகமானது.
அர்ச்சுனன்: இராட்சத தான்ம் எத்தகையது பகவானே?
பகவான்: அர்ச்சுனா! எந்தத் தானம் பிரதி உபகாரம் பெறுவதற்காகவோ அல்லது பிரதி பலனை எதிர்பார்த்து கொடுக்கப்படுகிறதோ,மேலும் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறதே என்று வேண்டா வெறுப்பாக கட்டாயமாக அளிக்கபடுகிறதோ அதுவே இராட்சத தானம்.
அர்ச்சுனன்: தாமச தானம் எத்தகையது?
பகவான்: எந்தத் தானம் மரியாதையில்லாமல் அலட்சியமாக அவமதிப்புடன் தகுதியற்றவர்களுக்கு தகாத காலத்தில் அளிக்கப்படுகிறதோ அது தாமச தானம்.
அர்ச்சுனன்: பகவானே! சிரத்தையுள்ள மனிதன் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வேள்வி,தவம்,தானம் முதலிய அறப்பணிகளை எவ்வாறு தொடங்க வேண்டும்?
பகவான்: அர்ச்சுனா! ஓம்,தத்,சத்( பிரணவ சொருபமான பரமாத்மா தான் உண்மையில் நிலையானது) எனும் மூன்று சொற்களால் குறிக்கப்படும் பரமாத்மா தான் படைப்பின் தொடக்கத்தில் வேதங்களையும் பிராமண சாஸ்திர கிரந்தங்களையும் வேள்விகளையும் படைத்தது.ஆகையால் பரமாத்மாவின் பெயரைப் போற்றி வேள்வி முதலான பணிகளை தொடங்க வேண்டும்.
அர்ச்சுனன்: பகவானே! ஓம் என்ற பிரணவம் எங்கு பயன் படுத்தப்படுகிறது?
பகவான்: அர்ச்சுனா! வைத்தீக சித்தாத்தங்களை ( கோட்பாடுகளை) ஏற்றுக் கொண்ட மனிதர்களுக்கு சாஸ்திர விதிப்படி ஏற்படுத்தப்பட்ட வேள்வி, தானம்,தவம் எனும் பணிகளை ஓம் என்று உச்சரித்துத் தான் ஆரம்பிக்கப்படவேண்டும்.அதுதான் தொன்று தொட்ட வழக்கம்.
அர்ச்சுனன்: பகவானே! தத் எங்கே பயன்படுத்தப்படுகிறது?
பகவான்:அர்ச்சுனா! தத் எனும் பெயரால் கூறப்படும் பரமாத்மாவிற்கு எல்லாமே உள்ளது.எல்லாம் அதற்கே உரிமையானவை என்கிற எண்ணம் நம்பிக்கையாக அமைய வேண்டும் .இந்த திட நம்பிக்கையுடன் உலக பந்தங்களிலிருந்து முத்தி பெற விரும்பும் மனிதர்கள் பயனைக் கருதாமல் வேள்வி முதலிய கடமைகளை செய்துவர வேண்டும்.
அர்ச்சுனன்: பகவானே! சத் எங்கே பயன்படுத்தப்படுகிறது?
பகவான்:பார்த்தா!பரமாத்மாவின் சத் எனும் திருநாமம் எல்லா இருப்பிற்கும் ( நிலைப்பாடு)சிரேஷ்டமான தன்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.போற்றத் தகுந்தது.சிரேஷ்டமான செயலுடன் “சத்” எனும் சொல் சேர்க்கப்படுகிறது.வேள்வி, தவம், தானம் இவைகளில் மனிதனுக்கு நிலைகூட “சத்” எனப்படுகிறது.எவ்வளவுதான் சொல்கிறது? அந்த பராத்மாவிற்காக செய்யப்படும் செயல்கள் யாவுமே “சத்” என்ப்படும்.
அர்ச்சுனன்: பகவானே! சத் என்பதற்கு மாறான அசத் காரியங்கள் எவை?
பகவான்:பார்த்தனே! சிரத்தையில்லாமல் செய்யப்படும் வேள்வி கொடுக்கப்படும் தானம், அநுட்டிக்கப்படும் தவம் முதலிய காரியங்களை சத் எனப்படும்.அசத் காரியங்களுக்கான பலன் இப்பிறவியிலும் இறந்த பிறகும் கூட ஏற்படுவதில்லை .அதாவது அசத்துக்கு எங்குமே நல்ல பலன் ஏற்படுவதில்லை.



