பிள்ளையார் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிள்ளையார்பட்டிதான்
பிள்ளையார் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிள்ளையார்பட்டிதான். மருதங்குடி, திருவீங்கைக்குடி, ஈக்காட்டூர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஊர், பிள்ளையார் என்று `ஜிங்’ கென்று அமர்ந்தாரோ அன்று முதல் `பிள்ளையார்பட்டி’ ஆகிவிட்டது.
`வாதாபி கணபதி’ நம் ஊருக்கு வந்த கதை ஞாபகம் இருக்கிறதா? அதன் பிறகு நரசிம்ம வர்மப் பல்லவன், தென்னாட்டை ஒரு சுற்றுலா அடித்தபோது, காரைக்குடி பக்கத்தில் இருந்த அழகான மலை கண்ணில் பட்டது. அவனால் அந்த மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவர்தான் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர்.
இவரிடம் எதுவும் வேண்டிக் கொள்ளக்கூட வேண்டாம். அவரைச் சும்மா பார்த்தாலே போதும், உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகும். எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்ற மனத் தெளிவு தானாய் வந்துவிடும்.
இவர் வலம்புரி விநாயகர். எல்லா இடத்திலும் நான்கு கரங்களால் நான்கு திக்கையும் ஆட்சி செய்பவர். இங்கே இரண்டே திருக்கரத்தால் விண்ணையும் மண்ணையும் தன் ஆட்சிக்குள் கொண்டுவந்துவிடுகிறார். ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், அர்த்தபத்ம ஆசனத்தில் வலக்கரத்தில் கொழுக்கட்டையோடு, இடக்கையை இடையில் தாங்கி, பெருமிதமாய்ப் பக்தர்களுக்கு அபயமளிக்கிறார்.
பிள்ளையார் சதுர்த்தியின் கதை உங்களுக்குத் தெரியுமா?
ஒரு சுக்ல சதுர்த்தி தினத்தில் விநாயகர், கைலாயத்தில் உற்சாகமாய் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். பெரிய தொப்பை, சின்னக் கால்கள் என்று உள்ள பிள்ளையாரின் டான்ஸைப் பார்த்ததும் சந்திரனுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்துவிட்டது.
“சந்திரனே, நீ கேலியாய்ச் சிரித்ததால் இனி எந்த சுக்ல சதுர்த்தியிலும் உன்னை
யார் பார்த்தாலும் அவர்களுக்குத் தீயது நடக்கும். அதனால் உன்னை வெறுத்து ஒதுக்குவார்கள். ஆனால், ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில் என்னைப் பூஜித்தால் அந்த அபவாதம் நீங்கும்” என்றார்.
இதுதான் பிள்ளையார் சதுர்த்தியின் வரலாறு. அதுவும் பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி மிகப் பிரமாதமாகக் கொண்டாடப்படுகிறது.
பிரமாண்டமான இந்தக் கோயில் நகரத்தாருக்குச் சொந்தமானது. கற்பக மரம் போல் நினைத்ததை அள்ளித் தரும் கற்பக விநாயகர் தவிர, மருதீசர், வாடாமலர் மங்கை, சோமாஸ்கந்தர், முருகப் பெருமான் என்று பலரும் காட்சி தருகிறார்கள்.
குபேரன் வணங்கிய, பசுவின் பால் பொழியுமாறு அமைந்துள்ள பசுபதி லிங்கமும் சிறப்பு வாய்ந்தது.
`அற்புதக் கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை’
என்ற கண்ணதாசனின் பாடலைச் சொல்லி, ஏராளமான கதைகள் கொண்ட பிள்ளையாரின் கதை ஒன்றைத் தெரிந்து கொள்வோமா?

1. அழகின் ஆபத்து
இமயமலைச் சாரல்.
ஐந்து வகை வேள்விகளையும் நாள்தோறும் நடத்தி, எப்போதும் சிவபெருமானின் நினைவுடனேயே வாழ்ந்து கொண்டிருந்தார் சவுபரி முனிவர். வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் பெரும் புலமை பெற்றவர் அவர்.
அவருடைய மனைவி மனோரமை. சிவனை நினைக்கும் தன் கணவரையே நிதம் நினைத்து, அவருக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டிருந்தாள். கற்புக்கரசியான அவள் பேரழகியும் கூட!
நிலையில்லாத உடலழகைப் பற்றியெல்லாம் கவலைப்படாது இறையழகு நோக்கியே அவளது கவனம் இருந்தது.
பக்தர்களைச் சோதித்துப் பார்ப்பதுதானே இறைவனின் திருவிளையாடல்!
கடவுள், கணவன் என்று தன்பாட்டுக்கு இருந்த மனோரமைக்கு ஒரு பேராபத்து வந்தது. அழகின் ஆபத்து.
ஒரு தினம். க்ரௌஞ்சன் என்ற கந்தர்வ மன்னன் ஆகாய வழியே பறந்து வந்து கொண்டிருந்தான். பர்ண சாலையின் வெளியே பூத்தொடுத்துக் கொண்டிருந்த மனோ
ரமை அவன் கண்களில் பட்டாள். அவளின் பேரழகு அவனை மயக்கிற்று. என்ன செய்கிறோம் என்பது கூடத் தோன்றாமல் மதியிழந்தான். மனோரமையின் கைகளைப் பிடித்து இழுத்தான்.
ரிஷிபத்தினி கோபம் கொண்டாள்.
அதே சமயம், நீராட வெளியில் சென்றிருந்த சவுபரி முனிவரும் அங்கே வந்தார். அவரது கண்கள் சிவந்தன.
பெருச்சாளி
முனிவர் கடும் கோபமடைந்தார்.
கோபம் வந்தால் சாபம்!
“ஏ, மடையனே, எந்தவகை தவறும் இழைக்காது, காட்டுக்குள் ஒதுங்கி வாழும் என் தர்மபத்தினியிடம் இப்படி அடாது நடந்து கொண்டது ஏன்? பிடி சாபம். நீ பெண்ணின் கையைப் பிடித்து இழுத்ததால், மண்ணைத் தோண்டி வளையில் ஒளியும் பெருச்சாளியாக மாறுவாயாக” என்றார்.
விநாயகரின் பக்தனான கிரௌஞ்சனுக்கு அப்போதுதான் புத்தி வந்தது. அஞ்சி நடுங்கினான். முனிவரின் பாதங்களில் படீரென வீழ்ந்தான்.
“சரணாகதி, சரணாகதி. மன்னியுங்கள் முனிவரே, அம்மையாரின் அழகில் மயங்கி இப்படி அடாது புரியத் துணிந்துவிட்டேன். அடியேன் செய்த குற்றத்தைப் பேரருள் காட்டித் தாங்கள் மன்னிக்க வேண்டும். நான் தங்களிடம் அடைக்கலம் புகுந்து விட்டேன்” என்று தரையில் முட்டி மோதி கண்ணீர் விட்டான். உளமார வருந்தினான்.
3. விநாயகர் துணை
முனிவர் மனமிரங்கினார்.
“க்ரௌஞ்சா, விட்ட சாபம் விட்டதுதான். உலகமே தலைகீழாக மாறினாலும் தூய முனிவரின் சாபத்தை மாற்ற முடியாது. ஆனாலும் உன் மேல் எனக்கு இரக்கம் வருகிறது. அதனால் சாப விமோசனம் பெறுவதற்கான வழியை மட்டும் கூறுகிறேன்” என்றார்.
கைகட்டி, வாய் பொத்தி, பவ்யமாய் நின்றான் க்ரௌஞ்சன்.
“க்ரௌஞ்சா, நீ விநாயகரின் பக்தன். உன் சாபம் அவராலேயே தீரும். இன்னும் கொஞ்ச காலத்தில் விநாயகர், பூலோகத்தில் பராசுவ முனிவரின் குடியில் தோன்றுவார். அப்போது உனக்கு விடுதலை கிடைக்கும். அதுவரை நீ பெருச்சாளியாகத் திரிய வேண்டியதுதான்.”
முனிவர் சொல்லி முடித்ததும் க்ரௌஞ்சனின் உடல் பெரிதாக வளர்ந்தது. நிறமும், உருவும் மாறிற்று. மலை அளவுக்கு விகாரமான பெருச்சாளியாக மாறினான்.
பிறவி வாசத்தால் பெருச்சாளி ஆக்ரோஷமாய் மண்ணைக் கிளறிற்று. தோண்டிற்று. ஓடிற்று.
ஐங்கரனா? பயங்கரனா?
அதே நேரம் பூலோகத்தில் அபிநந்தனன் என்ற பேராசை மிக்க அரசன் யாகம் ஒன்று செய்து கொண்டிருந்தான். தேவலோகப் பதவிகள் அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அவன் யாகத்தின் லட்சியம்.
அதனால் தேவேந்திரன் நடுங்கினான். உடனே உலகைக் கலக்கும் சக்தி பெற்ற காலரூபியை, அபிநந்தனன் மீது ஏவினான்.
காலரூபி ஓர் அழிவு சக்தி. அது வந்த வேலையை மறந்து, தானே எல்லாம் என்பதாக ஆட்டம் போட ஆரம்பித்து விட்டது.
காலரூபிக்கு காலனாக யாரால் வரமுடியும்?
நம் விநாயகப் பெருமான்தான்!
முப்பத்து முக்கோடி தேவர்களும் காலரூபியின் கொடுமைக்கு ஒரு முடிவு கட்டுமாறு வேண்ட, பிள்ளையார் சம்மதித்தார்.
புத்திரபாக்கியம் வேண்டி தவமிருந்த ஒரு மகாராணிக்கு மகனாகப் பிறந்தார் பிள்ளையார்.
அதுவும் எப்படி? யானை உருவில், கையில் ஆயுதங்களோடு, நான்கு கரங்களோடு, நீண்ட தும்பிக்கையுடன் அவதரித்தார்.
மகாராணி அரண்டு போனாள். என்ன இது விபரீதப் பிறப்பாக இருக்கிறதே என்று அஞ்சினாள்.
பாவம் அதிருஷ்டக்கட்டை!
அரசனுக்கும் அது விநாயகர் அவதாரம் என்று தெரியவில்லை. அந்த ஐங்கரனை பயங்கரனாக நினைத்து, தூரப் பிரதேசத்தில் அந்தக் குழந்தையைத் தூக்கியெறியுமாறு கூறிவிட்டான்.
அந்தக் குழந்தை தூக்கி வீசப்பட்ட இடம் பராசவ முனிவரின் இருப்பிடம்!
5. வாகனம்
அதிகாலையில் குளியலுக்கு வந்த முனிவர் தாமரை இலையில், தாமரைப் பூ மாதிரி சிரித்துக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டார்.
விநாயகரின் திருவருள் என்பதை உணர்ந்து தன் குடிலுக்குத் தூக்கிச் சென்று, பத்தினியிடம் கொடுத்தார். பெற்றவளுக்குக் கிடைக்காத பெரும் பாக்கியம், ரிஷிபத்தினிக்குக் கிட்டிற்று.
விநாயகர் வளர்ந்து கொண்டிருந்தார். அப்போதுதான் க்ரௌஞ்சப் பெருச்சாளி, அந்தப் பகுதியில் தன் அட்டகாசத்தை ஆரம்பித்திருந்தது.
பார்த்தார் விநாயகர்.
தன்னிடமிருந்த பாசக்கயிற்றை, பெருச்சாளி மீது வீசினார்.
பெருச்சாளி தப்பிக்கப் பார்த்தது. முடியுமா? அதைக் கட்டி இழுத்து வந்தது பாசக் கயிறு.
விநாயகப் பெருமான் பெருச்சாளியை ஆசிர்வதித்தார். “பிழையை உணர்ந்த க்ரௌஞ்சனே, நீ இன்று முதல் என் வாகனமாக மாறுவாய்” என்றார்.
யாருக்கும், கிடைக்காத அரிய வாய்ப்பு அந்த எலிக்கு அத்தனை `எளிமை’யாகக் கிடைத்தது!
6. ஓம்
அழிவு சக்தி எனப்படும் விக்ன சக்தியான காலரூபியையும் விநாயகர் விடவில்லை.
அதையும் வென்றார்.
காலரூபியும் இறைவனிடம் வருந்தி மன்னிப்புக் கேட்டது. காக்கும் கரங்கள் சும்மா இருக்குமா?
“நீ என்னை வணங்குபவர்களை எதுவும் செய்யாதே. நீ மனம் திருந்தியதால் அழிவு சக்தியான `விக்ன’ என்ற உன் பெயரைத் தாங்கி, விக்ன விநாயகராக நான் ஆகிறேன். அழிவு சக்தியை அழிக்கும் நாயகன்.”
காலரூபி, விநாயகனின் காலடியில் வீழ்ந்தது.
க்ரௌஞ்சப் பெருச்சாளி அதைப் பாசத்துடன் பார்த்தது.
பிள்ளையார்பட்டி
ே சிவகங்கை மாவட்டம் காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் உள்ளது.
ே நகரத்தாருக்குச் சொந்தமான ஆலயம்.
ே பிள்ளையார் சதுர்த்தி பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
http://www.kumudam.com/






